7 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்... முக்கியமான மாற்றங்கள் - பா.ரஞ்சித் வாழ்த்து

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந்தேதி ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முக்கியமான மாற்றம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.

இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com