

ஐதராபாத்,
தெலுங்கு திரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அஷு ரெட்டி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் வசிக்கும் இந்திய இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சுமார் ரூ.9 கோடி வரை ஏமாற்றியதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை சத்யநாராயணா அளித்த புகாரில், தனது மகனை திருமண வாக்குறுதி அளித்து நெருங்கிய அஷு ரெட்டி, ஐந்து கிலோ தங்கம், விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஐதராபாத் போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அஷு ரெட்டி இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, “என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன; வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.