

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த படம் விசாரணை. இதில், சமுத்திரக்கனி, தினேஷ், ஆனந்தி உள்பட பலர் நடித்திருந்தனர். ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. வெளிமாநிலத்துக்கு கூலி வேலைக்குச் சென்ற அப்பாவி இளைஞர்கள் போலீசாரிடம் பொய்வழக்கில் சிக்குவதும் பின்னர் அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி தமிழகத்துக்கு அழைத்து வருவதும், அரசியல் சூழ்ச்சியால் அந்த இளைஞர்கள் போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியாவதுமே கதை.
இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாராட்டுதலையும் பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விசாரணை படம் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது. வெனிஸ் படவிழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ஆகிய 3 தேசிய விருதுகளும் இந்தப்படத்துக்கு கிடைத்தது.
இந்நிலையில் ‘விசாரணை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “விசாரணை திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதயங்களை வென்ற ஒரு படம். வொண்டர்பார் பில்ம்ஸ் மற்றும் க்ராஸ்ரூட் பில்ம் கம்பெனி தயாரித்த மிகச்சிறந்த திரைப்படம் இது என்பதை கூற பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
‘விசாரணை’ திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன நிலையில் படக்குழுவினர் மீண்டும் இணைந்து கொண்டாடினர்.