

சென்னை,
நடிகர் யாஷ் தற்போது மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகையுமான இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் கேங்ஸ்டர் நாடக கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக 'டாக்ஸிக்' உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
சமீபத்தில் கீது மோகன்தாசின் பிறந்தநாளையொட்டி, படத்தில் பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டது. இந்தப்படம் கடந்த மார்ச் 19ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர் காரணமாக கடந்த 4-ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. பின்னர் அதுவும் தள்ளிப்போனது.
இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து கீது மோகன்தாஸ் கூறும்போது, "ஒரு மிகப்பெரிய படக்குழுவை நம்பிக்கையுடனும், துல்லிய தன்மையுடனும் வழிநடத்தி வருகிறோம். இது எங்கள் மிகப்பெரிய கனவு. வசனங்களை தாண்டி இப்படத்தில் மவுனமும் உரக்க பேசும். விரைவில் நல்ல செய்தி சொல்லுவோம். ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது", என்றார்.