ஆச்சார்யா படம் தோல்வி: சிரஞ்சீவியிடம் நஷ்டஈடு கேட்கும் வினியோகஸ்தர்கள்

நடிகர் சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்து தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையில் 25 சதவீதம் கூட திரும்ப கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஆச்சார்யா படம் தோல்வி: சிரஞ்சீவியிடம் நஷ்டஈடு கேட்கும் வினியோகஸ்தர்கள்
Published on

இதையடுத்து நஷ்டஈடு கேட்டு கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் பஜாஜ் என்ற வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆச்சார்யா படத்தை வாங்கி வெளியிட்டேன். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தியேட்டர்களில் சரியாக ஓடவில்லை. இதனால் பெரிய அளவில் நஷ்டம் அடைந்து இருக்கிறேன்.

ஏற்கனவே கொரோனா காரணமாக வினியோகஸ்தர்கள் பெருத்த நஷ்டத்தில் உள்ளனர். இந்த விஷயம் உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஆச்சார்யா படம் வாங்கி நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு நீங்கள் நஷ்டஈடு தர வேண்டும். நான் இந்தப் படத்திற்காக கடன் வாங்கி முதலீடு செய்தேன். படம் ஓடாததால் நஷ்டமடைந்து கடனாளி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுபோல் மேலும் சில வினியோகஸ்தர்களும் நஷ்டஈடு கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com