'படவிழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - இயக்குனர் பேரரசு

‘சிக்லெட்ஸ்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
'படவிழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - இயக்குனர் பேரரசு
Published on

சென்னை,

இயக்குனர் எம்.முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, ஜாக் ராம்பின்சன், ரஹீம், நயன் கரிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'சிக்லெட்ஸ்'. பாலமுரளி பாலு இசையமைத்து இருக்கும் இப்படம் தற்போதைய குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, 'படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை நான் ஒரு ஆலோசனையாக முன்வைக்கிறேன்.

'சிக்லெட்ஸ்' படத்தில் பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார். பெற்றோர் தங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை பிள்ளைகளும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே படத்தை பெற்றோர் பார்க்க வேண்டும். இளைய தலைமுறையினரும் படத்தை பார்த்து ரசித்து பெற்றோர்கள் உணர்வை புரிந்துகொள்ள வேண்டும்' என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com