படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம்

நடிகர் அருண் விஜய்க்கு `இருளன்' படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக தொடைப்பகுதியில் அடிப்பட்டுள்ளது.

படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம்
Published on

சென்னை,

அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் ‘இருளன்’ படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு தொடைப்பகுதியில் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இருளன்’ படத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இருளன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்ணா மேனன், அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கவனம் ஈர்த்த பர்ஸ்ட் லுக்

அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் ‘இருளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்

இந்த நிலையில், ‘இருளன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக் காட்சியின்போது அவரது தொடை தசைப் பகுதியில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

“இன்னும் பலமாக திரும்புவேன்”

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், காயங்கள் காரணமாக வழக்கமான உடற்பயிற்சி மற்றும் பணிகளில் தடை ஏற்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘இருளன்’ படப்பிடிப்பின்போது தொடை தசையில் காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். “விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான். இன்னும் பலமாக திரும்புவேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com