

இயக்குநர் முத்தையா திரைப்படத்திற்காக நடிகர் அருண் விஜய் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
1995-ஆம் ஆண்டு வெளியான 'முறை மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருண் விஜய், பின்னர் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா', 'வணங்கான்' உள்ளிட்ட படங்களின் வெற்றியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் அவரது 36-வது திரைப்படமான ‘ரெட்ட தல’ வெளியானது. இதையடுத்து, அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் விநியோகச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'விருமன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகி குறித்த தகவல் வெளியானது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா மேனன், இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆக்சன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடலை தயார் செய்துவரும் புகைப்படத்தை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
முத்தையா தன் மகனை வைத்து இயக்கிய ‘சுள்ளான் சேது’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.