நடிகர் போண்டா மணி மறைவு - சீமான் இரங்கல்

நடிகர் போண்டா மணியின் மறைவு குறித்த செய்தியறிந்து வேதனையடைந்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் போண்டா மணி மறைவு - சீமான் இரங்கல்
Published on

சென்னை,

சென்னை பெழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த திரைக்கலைஞர், தொப்புள்கொடி ஈழத்தமிழ் உறவு, அன்புச்சகோதரர் போண்டா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

சகோதரர் மணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்."

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com