நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
ஐதராபாத்,
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்திருக்கிறார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.






