

திருப்பரங்குன்றம்,
மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணராவ் கெய்க்வாட் நேற்று சென்றுள்ளார். அவரை ரஜினி ரசிகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு 51 லிட்டர் பசும்பால் வழங்கி பாலாபிஷேகம் செய்து முருகப்பெருமானை வழிபட்டார். இதனையடுத்து ரஜினி ரசிகர்களுக்கும், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும் அபிஷேக பால் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மிகவும் பழமையானது. அனைவரும் நலமாக இருக்க வேண்டி உள்ளேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனது சகோதரர் ரஜினிகாந்த் நேரில் வந்து நலம் விசாரித்தார். திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நான் நலம் பெற வேண்டி கோவிலில் பிரார்த்தனை செய்தனர். மேலும் அவர்கள் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வதாக வேண்டி உள்ளனர். அவர்களது வேண்டுதலின்படி முருகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டேன் என்றார்.