"மகாராஜா" படம் குறித்து நடிகர் விஜய்யின் பார்வை - இயக்குனர் நித்திலன் சாமிநாதன்

நடிகர் விஜய் "மகாராஜா" திரைப்படம் குறித்து சொன்ன கருத்துகளை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் பகிர்ந்துள்ளார்.
"மகாராஜா" படம் குறித்து நடிகர் விஜய்யின் பார்வை - இயக்குனர் நித்திலன் சாமிநாதன்
Published on

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் கல்லாக மகாராஜா மாறியது. இந்த வெற்றியைத்தொடர்ந்து ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. அங்கும், மகாராஜா படம் பல சாதனையை படைத்தது. படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு காரை படக்குழு பரிசளித்தது.

மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 'மகாராஜா' திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றது.

ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன், "மகாராஜா படத்தைப் பார்த்த நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டினார். ஒரு பெரிய கமர்சியல் நடிகர் இப்படியெல்லாம் படம் பார்ப்பாரா என்கிற அளவிற்கு மகாராஜா குறித்து அவர் சொன்ன விவரங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முக்கியமாக, சிங்கம்புலி மற்றும் மகள் கதாபாத்திரத்திரங்களுக்கு இடையான அவருடைய பார்வையும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்தன" எனத் தெரிவித்தார்..

தனித்துவமான, கதை சார்ந்த, சிறிய பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக 'மகாராஜா' பட வெற்றி அமைந்திருக்கிறது. இது சினிமாவை நேசிக்கும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com