செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை: மேல்முறையீடு கோரிக்கையால் தண்டனை நிறுத்திவைப்பு

ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை: மேல்முறையீடு கோரிக்கையால்  தண்டனை நிறுத்திவைப்பு
Published on

சென்னை,

நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து 4.5 கோடி செக் மோசடி குறித்து நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பைனான்ஸ்சியர் தரப்பில் வக்கீல் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார். அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனைய விதிக்கிறேன். வாங்கிய (செக்) தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவர் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com