முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகர்கள் அதர்வா, கவின்

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்து நடிகர்கள் அதர்வா, கவின் இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்கள்.
முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகர்கள் அதர்வா, கவின்
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் அதர்வா மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். சந்தித்த நிகழ்வு குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெருமையும், உன்னதமான மகிழ்ச்சியும் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் நம் சொந்த "விஜய் அண்ணா" தான். முக்கியமான நாளுக்கு சற்று முன்பாக, அவருடைய அன்பையும் ஆசிகளையும் பெற்றது எனக்கு உலகமே கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. மிக்க நன்றி, அண்ணா! இதைச் சாத்தியமாக்கிய (முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளரான) ஜெகதீஷ் பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உண்மையிலேயே பணிவன்புடனும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். மனநிறைவோடு, மிகுந்த நேர்மறை ஆற்றலை உணர்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

‘சரவணன் மீனாட்சி’ எனும் சின்னதிரைத் தொடர் மூலம் பிரபலமாகி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் வெளியான டாடா, பிளடி பெக்கர், மாஸ்க் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகர் கவின் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். சந்தித்த நிகழ்வு குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில மனிதர்கள், தங்களின் இயல்பான குணத்தாலேயே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் அவரது எளிமையையும், பணிவையும், கனிவையும் அது ஒருபோதும் மாற்றியதில்லை. லட்சக்கணக்கானோரைப் போலவே நானும் அவரைப் பெரிய திரையில் பார்த்து வளர்ந்தவன். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைப் பார்ப்பது, தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பெருங்கதை. என் வாழ்நாளின் மிகச்சிறந்த பொக்கிஷமான தருணம் இது. இத்தனை ஆண்டுக்கால என் ஆசையை நிறைவேற்றி வைத்த ஜெகதீஷ் பழனிசாமி அண்ணாவுக்கு மிக்க நன்றி” என குறிப்பிட்டிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com