

நடிகை பிரிகிடாவுக்கு அவரது காதலர் நடிகர் ஆனந்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் பவி டீச்சர் ரோலை ஏற்று நடித்தவர் பிரிகிடா. விஷால் நடித்த ‘அயோக்யா’ படத்தில் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து வர்மா, மாஸ்டர், வேலன், இரவின் நிழல், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன்,இட்லி கடை, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் பகல்’ படத்தில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இவர் நடித்த ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
மீசைய முறுக்கு, நண்பன் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆனந்த்.
நடிகை பிரிகிடா, நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாள் அன்று தனது காதலை நெகிழ்ச்சியான சமூக ஊடகப் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.
இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில், தற்போது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து பிரிகிடா வெளியிட்ட பதிவில், “சில நேரங்களில், மிகச்சிறந்த காதல் கதைகள் பெரிய திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் மனதாரத் தேர்ந்தெடுக்கும் இருவரிடமிருந்தே அவை தொடங்குகின்றன. இன்று, எங்களது குடும்பங்களின் ஆசியுடன், எங்களை ஒன்றிணைத்த காதலையும் போற்றும் வகையில், எங்களது இரு குடும்ப வழக்கத்தின்படி எங்கள் நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்கள் பயணத்தை இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களது வாழ்த்துகளைப் பார்த்தோம். உங்களது அன்பை உணர்ந்தோம். அதற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கிருந்துதான் எங்கள் 'என்றென்றும்' தொடங்குகிறது” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரிகிடா சகா நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், பிரிகிடாவின் ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.