

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தனது இயல்பான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது திரைப்பயணம், தேசிய விருது பெற்ற நடிகையாகவும், தற்போது பான் இந்தியா நட்சத்திரமாகவும் உயர்ந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்கார், அண்ணாத்த, மாமன்னன், சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், அந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2024 டிசம்பர் 12-ஆம் தேதி தனது நீண்டநாள் நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த தம்பதியினரை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.