

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனாவுக்கு வரும் 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.
அந்த திருமணத்தை தங்களுக்கு பிடித்த மாதிரி நடத்த விஜய்யும், ரஷ்மிகாவும் முடிவு செய்திருக்கிறரா்களாம். இரண்டு பேருமே திரையுலகில் இருந்தாலும் தங்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமா பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராஷ்மிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில், “நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள். எங்களை 'விரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக ‘தி வெடிங் ஆப் விரோஷ்’ என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே” என்று பதிவிட்டுள்ளார்.
'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு முன் இருவரும் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடிக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அது என்ன விளம்பரம் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்கிடையே இருவரும் இணைந்து ‘ரணபாலி' என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கின்றனர்.