

மும்பை
நடிகை சமந்தா வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் நடந்தது என கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது முதல் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கும் சமந்தா, வளைகாப்பு தொடர்பான அந்த பதிவில், ஒவ்வொரு சடங்கின் பின்னணியிலும் என்ன அர்த்தம் உள்ளது என்று நான் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.
ஆனால், நம்முடைய பாரம்பரியங்கள் மீது எப்போதும் எனக்கு ஆழ்ந்த மதிப்பு உண்டு. மந்திரம் உச்சரிக்கும்போது ஏற்படும் ஒலியில் ஏதோ விசயம் உள்ளது. அதனை உச்சரிக்கும்போது உருவாகும் சக்தியை நான் நம்புகிறேன். அந்த பாரம்பரிய பழக்கவழக்கங்களால் ஆற்றலானது, மிக கவனத்துடன் தலைமுறையினருக்கு கடத்தப்படுகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்றார்.
அவருக்கு ஸ்ரீவித்யா உபாசகா என்பவர் நிகழ்ச்சியின்போது, ஒவ்வொரு விசயமும் எப்படி செய்ய வேண்டும்? என்றும் அதன் ஆழ்ந்த முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறி, வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்ட சமந்தா, ஒவ்வொரு மந்திரத்திற்கும் நோக்கமும், அர்த்தமும் உள்ளது. அது சார்ந்த ஒவ்வொரு செயலுக்கும் தனித்த இடம் உள்ளது. எவ்வளவு அர்த்தத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று நான் மெல்ல புரிந்து கொண்டேன் என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.