நிஜ சிங்கத்துடன் துணிச்சலுடன் நடித்த நடிகை ஷ்ரிதா ராவ்

நடிகை ஷ்ரிதா ராவ் ‘சிங்கா’ என்ற படத்தில் நிஜ சிங்கத்துடன் துணிச்சலுடன் நடித்து வருகிறார்.
கே.சி.ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘சிங்கா’. எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் மதியழகன் தித்திர் பிலிம் ஹவுசுடன் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி கே.சி. ரவிதேவன் கூறுகையில், “சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, அவர்களுக்கு கதை பிடித்திருந்த போதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்ததோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். இப்படத்தில் உள்ள ஒரு எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். ‘1945’, ‘பொதுநலன் கருதி’ மற்றும் ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொழிகளைக் கடந்த கதை இது என்பதால், ‘சிங்கா’ படத்தை பான்-இந்தியா திரைப்படமாக எடுத்து வருகிறோம். இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.






