

சென்னை,
பிரபல சோப் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நடிகை தமன்னா ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தனது அனுமதியின்றி தன்னுடைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, தமன்னாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமன்னா தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன், நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று கூறி தமன்னாவின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.