

சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர்.
அதே போல் திரைத்துறை பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜீவா உள்ளிட்ட பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதே போல் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சுருதிஹாசன், அதிதி சங்கர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
அந்த வகையில், நடிகை திரிஷா சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்நிலையில், வாக்களித்த பின்பு நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விரலில் மை வைத்ததை காட்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், அந்த பதிவில் ‘அர்ஜுனரு வில்லு..’ என்ற பாடலை திரிஷா பதிவிட்டுள்ளார். இந்த பாடல், நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யுடன் திரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றதாகும். விஜய்யின் இந்த பாடலை பதிவிட்டு திரிஷா த.வெ.க.வுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.