

சென்னை,
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் 'எஸ்டிஆர் 51' குறித்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, ‘அரசன்’ மற்றும் ‘தர்மன்’ ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே காலகட்டத்தில் நிறைவடையும் என்றும், ‘தர்மன்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த படம் சிலம்பரசனுடன்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'எஸ்டிஆர் 51'. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ‘காட் ஆப் லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 'எஸ்டிஆர் 51' படத்தின் பணிகள் தாமதமாகியுள்ளன. இருப்பினும், படம் கைவிடப்படவில்லை என்றும், திட்டமிட்டபடி உருவாகும் என்றும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் 'எஸ்டிஆர் 51' குறித்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, ‘அரசன்’ மற்றும் ‘தர்மன்’ ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே காலகட்டத்தில் நிறைவடையும் என்றும், ‘தர்மன்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த படம் சிலம்பரசனுடன்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 'எஸ்டிஆர் 51' படத்திற்கான கதைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும், பாடல் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் ‘மன்மதன்’ வெளியான காலகட்டத்தில் வந்த படங்களின் பாணியில், பேண்டஸி அம்சங்களுடன் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் 'எஸ்டிஆர் 51' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.