

டெல்லி,
தனது பெயர், புகைப்படம், உருவ அமைப்பு மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி நடிகை தபு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் (Deepfake) உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் ஆள்மை உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டீப்-ஃபேக் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பல பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் பாலிவுட் நடிகை தபுவும் இணைந்துள்ளார். தனது பெயர், புகைப்படம், உருவ அமைப்பு மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தபு தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டீப்-ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற டிஜிட்டல் முறைகேடான உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது ஆள்மை உரிமையை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, மனுவில் சில தொழில்நுட்ப ரீதியான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தபுவுக்கு உத்தரவிட்டுள்ளது. தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.