

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடைசியாக ‘தீயவர் குலை நடுங்க' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் 'ஓ சுகுமாரி' படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் தனது எதிர்கால திரைப்பயணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "நான் இதுவரை பெரும்பாலும் பாசிட்டிவ் கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளேன். வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 'படையப்பா' படத்தில் நீலாம்பரி போன்ற நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட, வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அதேபோல், சமீபத்தில் வெளியான 'அப்செஷன்'போன்ற உளவியல் திரில்லர் கதைகளிலும் நடிக்க விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த விருப்பம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பின்னணியிலான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ள அவர், எதிர்காலத்தில் வித்தியாசமான வில்லி வேடங்களில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.