

சென்னை,
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். தமிழில் 2012ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இவர் 'வை ராஜா வை மற்றும் லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கினார். அதிலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
அதாவது, லால் சலாம் படத்தை தொடர்ந்து, 5 மொழிகளில் தயாராகவுள்ள புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.