

சென்னை,
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையிலான 'நம்ம கே.பாக்யராஜ்' அணியும், இயக்குநர் வி.சி.குகநாதன் தலைமையிலான 'திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்' அணியும் போட்டியிடுகின்றன. இதில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வாக்கை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்பது மிகவும் முக்கியமான ஒரு அமைப்பு. ஏனெனில் இங்கிருந்துதான் எல்லாமே தொடங்குகிறது. திரைப்படத்திற்கு அடித்தளமே எழுத்துதான். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களது எனது வாழ்த்துகள்” என்றார்.
தொடர்ந்து நடிகர் அஜித்துடனான அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆரம்பக்கட்ட பணிகள் எல்லாம் முடிந்துவிட்டன. இந்த ஆகஸ்ட் மாதம் படம் குறித்த அறிவிப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தயாரிப்பு நிறுவனம் தரப்பும், நடிகர் அஜித் தரப்பும் விரைவில் இது குறித்து சொல்வார்கள். அறிவிப்பு வெளியான பிறகு உடனடியாக படப்பிடிப்பு தொடங்கிவிடும்” என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.