யுவ புரோஸ்கர் தேசிய விருது - வாகை சந்திரசேகருக்கு அறிவிப்பு

இசை, நாடகம், நடனம் பாரம்பரிய கலைகளில் பங்களிப்பிற்கு வழங்கப்படும் யுவ புரோஸ்கர் விருது ஆகும்.
யுவ புரோஸ்கர் தேசிய விருது - வாகை சந்திரசேகருக்கு அறிவிப்பு
Published on

சென்னை,

வாகை சந்திரசேகர் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தனது எதார்த்தமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தீவிர அரசியலிலும் ஈடுபட்டு, திமுக சார்பில் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாகை மலர்

மே 3, 1956 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர்களால் மாலை சூடும் வழக்கம் உண்டு. அந்த வெற்றியை குறிக்கும் விதமாகவே இவருக்கு 'வாகை' என்ற பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் வாகை சந்திரசேகர் சிறு வயது முதலே மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

துணை கதாபாத்திரம்

1980களில் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.இவரது நடிப்புத் திறனைப் பாராட்டி, 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

தேசிய விருது

இந்தநிலையில், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி "யுவ புரோஸ்கர்" தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi Puraskar) இந்தியாவின் இசை, நடனம், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாகும்.

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய /நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பொம்மலாட்டம் கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்பு அல்லது ஆராய்ச்சி என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com