விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான், தனக்கு விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்
Published on

சென்னை,

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விருதுகளை, அடுத்த மாதம் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்கள் ஆகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகள் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், ‘பொன்னியின் செல்வன் 1’படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனக்கு விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com