என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள்?- கே.பி.ஓய் பாலா வேதனை

ஏழை-எளியோருக்கு உதவிகள் செய்து வரும் பாலா குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை,
சின்னத்திரையில் வெளியான என்ற கே.பி.ஒய் என்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து கவனம் ஈர்த்து வந்த பாலா, தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாகவும் களமிறங்கி இருக்கிறார்.
ஏழை-எளியோருக்கு உதவிகள் செய்து வரும் பாலா குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை வெளிநாட்டு கைக்கூலி என்றும், அவர் கொடுத்த ஆம்புலன்சுகள் உள்ளிட்ட வாகனங்கள் போலி என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட பரபரப்பானது.
இதற்கு பாலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. நான் சாதாரணமான ஆள். நான் வண்டி வாங்கி கொடுக்கிறேன் என்றால், அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதனால் தான் நம்பரை மறைத்து கொடுக்கிறேன்.
நான் வாங்கிக் கொடுத்த அனைத்து ஆம்புலன்சுகளும் நன்றாக இயங்கி வருகின்றன. இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் எனது சொந்தக் காசில், நான் சம்பாதிப்பதைக் கொண்டுதான் செய்து வருகிறேன். சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது'', என்றார்.






