

அஷ்ரப்பின் ‘போட்டோகிராபர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
‘ரா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஷ்ரப் தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். "சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்" பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கருணாகரன், ஆடுகளம் நரேன், "உறியடி" சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். படத்திற்கு ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்கிறார், ராஜ்குமார் சந்திரசேகன் இசை அமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரிக்கிறார்.
‘போட்டோகிராபர்’ படம் பற்றி அஷ்ரப் கூறும்போது, “கதையின் நாயகன் ஒரு "வைல்ட்" போட்டோகிராபர். மதிகெட்டான் சோலை என்ற மலைகிராமத்தில் தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு அரிய இயற்கை நிகழ்வைப் புகைப்படம் எடுக்க முயல்கிறான். ஆனால், அவனது அந்த தேடல் ஒரு கட்டத்தில் அவனது உயிர் பிழைப்பிற்கான வேட்டையாக மாறுகிறது. அதன் பின் நடப்பதை திரில்லுடன் சொல்கிறது படம்” என்றார்.
‘போட்டோகிராபர்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘போட்டோகிராபர்’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.