ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரம் : திசை திருப்பும் முயற்சி நடக்கிறதா ...? பிரபலங்கள் கண்டனம்

பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சினையை சாதி பிரச்சினையாக திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரம் : திசை திருப்பும் முயற்சி நடக்கிறதா ...? பிரபலங்கள் கண்டனம்
Published on

சென்னை

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலமான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜகோபாலனின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி ஒருவர் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தனது நிலைப்பற்றி எடுத்து கூறி வருத்தப்பட்டுள்ளார்.

தற்போது மாடலிங் துறையில் உள்ள அந்த மாணவி ஆசிரியர் பற்றிய தகவல்களை சேகரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் எல்லைக்குட்பட்ட அசோக் நகர் மகளிர் போலீசார் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சே சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

நங்கநல்லூர் இந்து காலனி 7-வது தெருவில் வசித்து வந்த ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 8-ந்தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலனிடம் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண்பிரசாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில், ராஜகோபாலன் பற்றி பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆன்- லைனில் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அவரது ஆன்-லைன் வகுப்பு குழுவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துள்ளனர்.

வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்பில் ராஜகோபாலன் தோன்றிய புகைப்படங்கள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மாணவிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச வீடியோக்களை ராஜகோபாலன் அனுப்பி இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலீஸ் விசாரணையின் போது இதனை அவர் வாக்குமூலமாக அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சினையை சாதி பிரச்சினையாக திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறி இருப்பதாவது:-

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 2 பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்னும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும்.

இந்தபிரச்சினையை சாதிப் பிரச்சினையாகக் திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.

இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர்.

சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com