

‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் (1938) பெயரும் ஆகும். விகதகுமாரன் மற்றும் மார்த்தாண்ட வர்மா ஆகியவற்றிற்கு பின் மலையாளத்தில் வெளிவந்த மூன்றாவது படம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘பாலன் தி பாய்’ படம் வருகிற 14ம் தேதி கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.