பிக் பாஸ் 10: நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் - சீமான்

‘பிக் பாஸ் 10’ வார இறுதி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் 10: நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் -  சீமான்
Published on

விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

சட்டப் பேரவையை மையமாக கொண்ட நிகழ்ச்சி

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.

ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை

தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.

விர்ச்சுவல் வாரியர்ஸ் விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதிமுக எம்.பி. இன்பதுரை

நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.

விஜய் டிவி விளக்கம்

இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு தற்போது விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தவெக தொண்டர்கள் மற்றும் விர்ச்சுவல் வாரியர்ஸ்ன் ட்ரோலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாக கண்டித்துள்ளார்.

சீமான் அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.

எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com