

ஐதராபாத்,
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அந்த நிகழ்ச்சி குறித்த தனது கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து ஹரிதேஜா கூறுகையில், "முதல் சீசன் ஐதராபாத்தில் நடக்கவில்லை, மும்பைக்கு அருகில் உள்ள லோனாவாலாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்தது. இரவு நேரங்களில் புலி உறுமும் சத்தம் வீட்டிற்குள் கேட்கும், சில சமயங்களில் பாம்புகள் கூட வரும். இருப்பினும், அப்போது தொகுப்பாளராக இருந்த ஜூனியர் என்.டி.ஆர் உடன் உரையாடியது அந்த நாட்களை சுவாரஸ்யமாக்கியது," எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் சீசன் 8-க்குள் நுழைந்த ஹரிதேஜா, அது தனது வாழ்க்கையின் மிக மோசமான முடிவு என வருத்தப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், "முதல் சீசனில் எனக்குக் கிடைத்த நற்பெயர், சீசன் 8-ல் மொத்தமாகச் சிதைந்துவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு என்னைப் பற்றி பரவிய எதிர்மறையான விமர்சனங்கள் என்னை நிலைகுலையச் செய்தன. அந்த டிரோல்களால் நான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. இந்த ஜென்மத்தில் இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குப் போகமாட்டேன்; அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கே இப்போது எனக்குச் சலிப்பாக இருக்கிறது," என ஹரிதேஜா கூறியுள்ளது தற்போது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.