ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரலை பயன்படுத்தலாமா? - எஸ்.பி.பி சரண் பதில்

விஜய் நடிப்பில் வெளியான 'திகோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலில் ஒரு பாடல் இடம் பெற்றது.
ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரலை பயன்படுத்தலாமா? - எஸ்.பி.பி சரண் பதில்
Published on

சென்னை,

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம், மறைந்த நடிகர்கள் மீண்டும் நடிப்பதைப்போல காட்சிகளும் பாடகர்கள் குரலில் பாடல்களும் சினிமாக்களில் குறிப்பாக தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'திகோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல் காட்சி இருந்தது. அதே படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலிலும் ஒரு பாடல் இடம் பெற்றது. அதேபோல், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் 'மனசிலாயோ' பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தனது தந்தை மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் குரலை ஏ.ஐ மூலம் படங்களில் கேட்பதில் விருப்பமில்லை என்று எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது தந்தையின் குரலை ஏ.ஐ மூலம் பயன்படுத்த நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டனர். ஆனால், நான் முடியாது என்றேன். ஒரு சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இதே பதில்தான். ஏ.ஐ மூலம் அவரது குரலை கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர் இறந்துவிட்டார், அவரை விட்டுவிடுங்கள்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com