

சென்னை,
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் புச்சி பாபு சானா தன்னிடம் படத்தின் கதையை கூறியபோது, அதன் கதைக்களம் மிகவும் பிடித்துப் போனதாகவும், அதனால் உடனடியாக அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
ஆனால் அதன்பிறகு தமக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால், தனது கதாபாத்திரத்திற்கு வேறு நடிகரை தேர்வு செய்து கொள்ளுமாறு படக்குழுவிடம் கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால் நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் புச்சி பாபு சனா இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்.
அவர்கள், “இந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள் மட்டும்தான் நடிக்க வேண்டும்” என்று கூறி, தனது சிகிச்சை முடிந்து திரும்பும் வரை பொறுமையாக காத்திருந்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து உணர்ச்சியுடன் பேசிய சிவராஜ்குமார், “என்னால் படப்பிடிப்பு தாமதமானாலும், அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை மாற்றவில்லை. ராம் சரணும், இயக்குநர் புச்சி பாபுவும் எனக்காக நீண்ட காலம் அன்போடு காத்திருந்தனர். அவர்களின் இந்த மனிதநேயத்திற்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சிவராஜ்குமார், திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.