

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று. 80 கோடி ரூபாய் வசூலித்தது.
அதனை தொடர்ந்து தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் சவுத் நிறுவனமும், தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி. உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் புதிய கதாபாத்திரம் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் லைப்ரரியன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவில் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் பற்றிய மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படம் வருகிற மே மாத கோடை விடுமுறைக்கு வெளியாகிறது.