'பொன்னியின் செல்வன் - 1' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு

'பொன்னியின் செல்வன் - 1' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன் - 1' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சட்ட விரோதமாக இயங்கக்கூடிய 2,405 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் அது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இது திரைக் கலைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும் அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com