

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் சேரனின் ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணி வெற்றி பெற்றுள்ளது.
மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னைக்குக் குடியேறியவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘புரியாத புதிர்’ படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’ எனத் தொடர்ந்து தரமான படைப்புகளாய் கொடுத்து ரசிகர்கள் விமர்சகர்கள் மனங்களில் மதிப்புக்குரிய படைப்பாளுமையாக நிலைத்து நின்றார் சேரன்.
‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ஆகிய திரைப்படங்கள் சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன் முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, ஜெகனின் ‘ராமன் தேசிய சீதை’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன்.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், இன்று சென்னையில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் கே.பாக்யராஜ் பெயரிலேயே போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரனின் ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணி 12 தபால் வாக்குகள் உட்பட 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு நம்ம கே.பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர்கள் சமுத்திரக்கனி, சினேகன் வெற்றி பெற்றுள்ளனர்.