பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது

பாலிவுட் நடிகைக்கு அன்பளிப்பு வழங்கி அவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது
Published on

புனே,

பாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகை கிறிசான் பெரைரா (வயது 27). சமீபத்தில் அவர் சார்ஜாவுக்கு சென்று உள்ளார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் கொண்டு சென்ற விருதுகளுக்கான கோப்பை ஒன்றில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் பெரைரா, சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், அவரது தாயார் பிரமீளா பெரைரா, பழிவாங்க சதி திட்டம் நடந்து உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தியதில், பல விசயங்கள் வெளிவந்தன.

மும்பையின் போரிவலி பகுதியை சேர்ந்த அந்தோணி பால் (வயது 32) மற்றும் அவரது கூட்டாளியான ராஜேஷ் பபோட் என்ற ரவி (வயது 42) ஆகிய இருவரை கைது செய்தனர். பிரமீளாவை பழி வாங்குவதற்காக கிறிசானை வழக்கில் சிக்க வைக்க பால் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, சர்வதேச வலைதள தொடர் ஒன்றின் விளம்பரத்திற்காக கிறிசானை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்ப இருவரும் திட்டமிட்டு உள்ளனர். விமான நிலையத்தில் கிறிசானிடம் கோப்பையை வழங்கி உள்ளனர்.

அதில் அவர்கள் போதை பொருளை மறைத்து இருக்கின்றனர். இதேபோன்று வேறு 4 பேரையும் சிக்க வைக்க பால் திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com