நடிகர் விஜய் சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

விஜய் சேதுபதி தரப்பில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

கடந்த 2021-ஆம் ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன்.

அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இவர் மீதான அவதூறு வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஒரு நடிகர் கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் யாரையும் அவதூறாக பேசக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவும் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் விஜய் சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் எதுவும் செய்ய முடியாது எனவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் கிரிமினல் அவதூறு வழக்கை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com