

சென்னை,
நடிகர்கள் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் கருப்பு. இந்த படம் கடந்த 15-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் நீதித்துறை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கருப்பு படத்தில் இந்திய நீதித்துறையையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், வக்கீல்களையும் கடுமையாக விமர்சனம் செய்து, அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதி கதாபாத்திரம் லஞ்ச நடவடிக்கைகள் ஈடுபடுவது போலவும், மது அருந்துவது போலவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தை தொடர்ந்து திரையிட அனுமதித்தாலோ, ஓ.டி.டி. தளங்களில் வெளியிட அனுமதித்தாலோ நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே, இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமணன் ஆகியோர், "படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் வரம்புக்குள் வருகிறது. இந்த படத்தை தடை செய்ய இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.