"ஹாலிவுட் வாக் ஆப் பேம்" கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகை

'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' என்பது அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வைன் ஸ்ட்ரீட் நடைபாதையில் நட்சத்திரம் பதிக்கப்படுகிறது.
"ஹாலிவுட் வாக் ஆப் பேம்" கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகை
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த இவருக்கு துவா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் 2026ம் ஆண்டுக்கான ஹாலிவுட் வாக் ஆப் பேம்' என்ற கவுரவத்தை பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று இரவு அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். இதன்மூலம் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். தீபிகா உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் மற்றும் ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர்.

பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த கவுரவம் தீபிகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கவுரவத்தால் உலக அரங்கில் இந்தியாவை மேலும் இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஏற்கனவே 2018ல் டைம் பத்திரிக்கையின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெற்று இருந்தார். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாகவும் உள்ளார். இப்போது இந்த கவுரவத்தால் அவரின் புகழ் மேலும் அதிகமாகி உள்ளது.

View this post on Instagram

ஹாலிவுட் வாக் ஆப் பேம் என்றால் என்ன.?

ஹாலிவுட் வாக் ஆப் பேம்' என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது ஹாலிவுட் பவுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் பரவியுள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை தீபிகா பெறுவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com