

மும்பை,
இந்தி திரையுலகை சேர்ந்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா. நடிகர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் ரவுடி ரத்தோர், தபங் 2 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவரது சமூக ஊடக கணக்கில் மர்ம நபர் ஒருவர் அவதூறு பதிவுகளை வெளியிட்டு உள்ளார். இதுபற்றி மும்பை இணையதள குற்ற பிரிவு போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீசாருக்கு நன்றி தெரிவித்து நடிகை சோனாக்சி சின்ஹா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், உங்களுக்குரிய பேச்சு சுதந்திரம் என்பது அவதூறுகளை பதிவிடுவதற்கான சுதந்திரம் அல்ல. இணையதள உலகம் என்பது பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. அதற்காக நான் அமைதியாக இருக்கமாட்டேன்.
நானோ, நீங்களோ அவதூறு பதிவுகளை சகிக்க கூடாது. இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். இதுபோன்ற பதிவுகளுக்கு எதிராக போலீசாரிடம் நான் புகார் அளித்தேன். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்து உள்ளார்.