ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

டெல்லி,

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரின் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.தற்போது, ஏ.ஆர்.ரகுமான் இசையில் 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.

பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர், ஏ.ஆர். ரகுமான் மற்றும் பொன்னியின் செல்வன் 2  படக்குழுவினருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ரகுமான் "வீர ராஜா வீரா" பாடலில், தாகரின் தாத்தா மற்றும் தந்தை பாடிய "சிவ ஸ்துதி" பாடலின் சில பகுதிகளைப் பயன்படுத்தியதாக தாகர் குற்றம்சாட்டியிருந்தார்.இதுதொடர்பான வழக்கில் "சிவ ஸ்துதி" பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி வீரா ராஜா வீரா பாடலை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரகுமானே கோர்ட்டில் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜா வீரா' பாடல் தொடர்பான காப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com