

சென்னை,
தமிழ் திரையுலகின், பிரம்மாண்ட இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், ஷங்கர். இவரது கடைசி படைப்புகளான 'இந்தியன்-2', 'கேம் சேஞ்சர்' படங்கள் தோல்வியை சந்தித்தன. 'இந்தியன்-3' படம் வருமா, வராதா? என்றும் தெரியாத நிலையில், தனது கனவு படத்தை ஷங்கர் கையில் எடுக்கிறார்.
அதன்படி 'வேள்பாரி' நாவலை படமாக்கும் முயற்சிகளில் இனி முழுமூச்சாக இறங்கப் போகிறாராம். பெரும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது ஷங்கர் இயக்கவுள்ள 'வேள்பாரி' படத்தின் ஹீரோவாக நடிக்க விக்ரம், சூர்யா, பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தன. இந்த நிலையில், படத்தின் கதாநாயகனாக நடிக்க நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முக்கிய வேடத்திற்கு பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது ‘சாவ்வா’ பட வெற்றியால், இந்த பீரியட் படம் இந்திய அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வேள்பாரி' படத்தின் மூலமாக பழைய பன்னீர்செல்வமாக ஷங்கர் மீண்டும் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.