சினிமாவில் 20 ஆண்டுகள்... நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் 20 ஆண்டுகள்... நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி
Published on

தனுஷ் 2002-ல் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றது. அடுத்து வெளியான காதல் கொண்டேன் படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.

புதுப்பேட்டையில் அதிரடி காட்டினார். பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், வேலை இல்லா பட்டதாரி, அசுரன் என்று பல வெற்றி படங்களில் நடித்தார். ராஞ்சனா, ஷமிதாப், அந்த்ராங்கி ரே ஆகிய 3 இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தி கிரே மேன் படம் மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளார். தனுஷ் சினிமாவுக்கு வந்து தற்போது 20 வருடங்கள் ஆகி உள்ளது.

இதையொட்டி தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமாவில் எனது பயணத்தை தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க தொடங்கியபோது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடவுள் கருணை காட்டி இருக்கிறார். என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது தாய்க்கும் நன்றி. அவரது பிரார்த்தனைகள்தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து இருக்கிறது. இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். எண்ணம்போல் வாழ்க்கை, அன்பை பரப்புங்கள்'' என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com