

சென்னை,
தனுஷை ஆரம்பகாலத்தில் பேட்டி கண்டபோது, அவர் சோர்வாகவும் ஆர்வமில்லாமலும் இருந்ததால் முரட்டுத்தனமானவர் என நினைத்ததாக பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
தமிழில் செய்தி வாசிப்பாளராக முதலில் தனது பணியைத் தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான சீரியல்கள் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடிக்கத் தொடங்கினார்.
சின்னத்திரையில் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை பிரியா பவானி சங்கர் பிறகு தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக இருமுடி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு தொடர்ந்து புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியா பவானி சங்கர், தான் தொகுப்பாளராக இருந்த ஆரம்ப நாட்களில் தனுஷை பேட்டி கண்டதை நினைவு கூர்ந்தார். அப்போது, தனுஷ் சோர்வாக இருந்ததோடு, அந்தப் பேட்டியில் ஆர்வமில்லாதவராகவும் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் ஆக்ரோஷமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதாகத் தான் நினைத்ததாக பிரியா கூறினார்.
ஆனால், அவரே திரையுலகில் நுழைந்து, விளம்பரப் பணிகளின் சோர்வையும் திரும்பத் திரும்ப வரும் பேட்டிகளையும் அனுபவித்த பிறகு, நடிகர்கள் சில சமயங்களில் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பின்னர் அவர் தனுஷைச் சந்தித்து, அவரிடம் வெளிப்படையாகக் இது குறித்து கூறினார்.
உண்மையிலேயே நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டீர்கள் என்று நான் நினைத்தேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.