கார்த்தி இல்லாமல் "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்தை இயக்க முடியாது- செல்வராகவன்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் தொடர்பான கேள்விக்கு இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பதில் அளித்துள்ளார்.
கார்த்தி இல்லாமல் "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்தை இயக்க முடியாது- செல்வராகவன்
Published on

சென்னை,

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டு கிடைத்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதேநேரம், இப்படம் தெலுங்கில் 'யுகனிக்கி ஒக்கடு' என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

12ம் நூற்றாண்டில், சோழர்கள் பாண்டியர்களால் தோற்கடிக்கப்படுகின்றனர், இதனால் சோழ மன்னனும் அவனது மக்களும் பாண்டியர்களுடைய மீன் சிலையுடன் தலைமறைவாக சென்று வாழ்ந்துவருகின்றனர். எப்படியும் நல்லகாலம் வரும், செய்தியை தூதன் ஒருவன் எடுத்துவருவான், சோழர்குலம் அழியாமல் தழைத்து வாழும் என்ற நம்பிக்கையுடன் சோழ மக்கள், தங்களை யாரும் நெருங்கி விடக்கூடாது என 7 பொறிகளை வைத்து வாழுகிறார்கள். அதற்குபிறகு 8 நூற்றாண்டுகளுக்கு பின் அவர்களை தேடிச்செல்லும் ஒரு ஆராய்ச்சியாளரை பின்தொடர்ந்துவரும் எதிரிக்குழு என படம், அதுவரை தமிழ்சினிமா பார்க்காத கதைக்களத்தை கொண்டிருந்தது. படத்தின் இயக்கமும், பின்னணி இசையும் எக்காலத்திற்குமான சிறந்த படைப்பாற்றலை கொடுத்திருந்தது.

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் கடந்த மார்ச் 14ம் தேதி ரீ-ரிலீஸானது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகம் குறித்து மனம் திறந்துள்ளார் செல்வராகவன். "நாங்கள் செய்த தவறு 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகம் குறித்து ரொம்ப விரைவாக அறிவிப்பு வெளியிட்டதுதான். கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் இல்லாமல் பண்ண முடியாது. சோழர்கள்,பாண்டியர்கள் என திரைக்கதை கொஞ்சம் சிக்கலானது. படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருக்கு. இப்போ இருக்கிற காலத்தில், 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகம் எடுப்பது ரொம்ப எளிது. பொருட்செலவும் பெரிதாக இருக்காது முதல் பாகத்துடன் ஒப்பீடு செய்யும் போது.. தயாரிப்பாளர், இந்த படத்தில் நடிக்க நடிகர்களின் குறைந்தப்பட்சம் ஒரு வருடம் கால்ஷீட் தேவைப்படுகிறது. நேரம் கைக்கூடினால், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2, மெண்டல் மனதில் போன்ற படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com