

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார்.
2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தொடர்ந்து ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது, அவர் நடிப்பில் உருவான ‘கர’ திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது. இது நடிகர் தனுஷின் 54-வது படமென்பதால் அவரின் ரசிகர்களுக்கும் ஆவல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் 20-வது திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளதை அறிவித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் நந்தன் இயக்க, தனுஷுடன் ஹரிதா லிங்கசாமி இணைந்து தயாரிக்கிறார். நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிக்க மிருணாள் தாகூரிடம் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.